Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்

Go down

சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர் Empty சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்

Post by oviya Fri Dec 12, 2014 1:38 pm

வெள்ளூர்

ஆணவம் எத்தனை சூட்சுமமாக இருந்தாலும் அடியோடு கொய்வான் ஈசன். ஆணவமற்று இருப்பவர்களுக்குதான் அடிமையாவான். இதுவே ஈசனின் இயல்பு. அதை பார்வதி தேவியின் தந்தையான தட்சன் மறந்தான். திமிரோடு ஈசனை அழையாது யாகத்தைத் தொடங்கினான். தேவாதி தேவர்கள் தட்சனின் யாகத்தைக் காணச் சென்றனர். யாக குண்டத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஈசனின் அருளில்லாததால் கருமையாக புகைந்தது. தட்சனின் முகம் இருண்டது. தேவர்கள் புருவம் சுருக்கி இந்த விசித்திரத்தை வியந்து பார்த்தார்கள். மந்திரங்களில் ஈசனுக்குரியதை தவிர்த்தனர்.

பார்வதியும் சிவனின் அறிவுரையைப் புறந்தள்ளி தந்தை தட்சனை காணச் சென்றாள். தட்சனிடம் ஈசனை அழையாது யாகம் செய்வது எவ்வாறு தகும்? என்று நியாயம் கேட்டாள். தட்சனிடம் அவமானப்பட்டாள். ஏமாற்றமும், விரக்தியுமாய் மீண்டும் கயிலை திரும்ப, கோபத்தின் சிகரத்திலிருந்தருத்ரன் நெற்றிக் கண்களால் சக்தியை எரித்தார். அவள் சூட்சும உருவில் ஈசனை நினைத்து உருகினாள். பூவுலகில் பர்வதராஜனுக்கு மகளாக அவதரித்தாள். ‘காலம் கனிந்து வரும்போது உன்னை கயிலைக்கு அழைத்துக் கொள்வேன்’ என்று உறுதி கூறினார் கயிலைநாதன்.

சக்தியில்லாமல் உலக விஷயங்களின் இயக்கம் தடைபட்டது கண்ட திருமால் கவலையடைந்தார். பிரபஞ்சம் நிலைகுலைந்தது. உலக நன்மைக்காக வேறு வழி எதுவும் தோன்றாமல், மோன நிலையில் இருந்த சிவனுக்கு, சக்தியின் நினைவை உண்டாக்க மன்மதனை அழைத்து ஈசன் மீது காம பாணத்தை செலுத்த ஆணையிட்டார்கள். புன்னை மரத்தின் பின்னால் மறைந்திருந்து சர்வேஸ்வரன் மீது காம பாணத்தை செலுத்த மன்மதன் குறிபார்த்தான். ருத்ரன் சீற்றமானார். வில்லிலிருந்து காம பாணம் விடுபடுமுன், மன்மதனை ஈசன் தன் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தார்.

விடுபட்ட காம பாணம் திசைமாறி பர்வத மலையில் கடும் தவத்தில் ஈடுபட்டிருந்த பார்வதி தேவியின் மீது பட்டது. காம பாணம் தாக்கிய நொடியில் பராசக்தி பூப்படைந்தாள். காம சுந்தரியாக அருட்காட்சியளித்தாள். தியான நிலையில் இருந்த ஈசனை அவளின் காம சக்தி அசைத்தது. சிவனையே காமத்தால் அசைத்ததால் சிவகாமியானாள். காமத்திற்கு ஆசை என்றும் பொருள் உண்டு. உயிர்களை உருவாக்க, காக்க, மீண்டும் மறைக்க எனும் முத்தொழிலையும் ஏற்றுச் செய்யும் ஆசை சிவசக்தியிடம் மிகுந்திருந்தது.

மோன நிலையில் கிடந்த மகாதேவன் விழித்தார். அன்னையினை ஆட்கொண்டார். மன்மதன் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினங்களிடையே காதல் பரிமாற்றம் ஏற்படாமல் ஏக்கம் பெருகியது. மன்மதனின் மனைவி ரதிதேவி, ஈசனை வணங்கி நின்றாள். மன்மதனை மன்னிக்கச் சொன்னாள். மாங்கல்ய பலத்தையும், பாக்கியத்தையும் தருமாறு வேண்டினாள். ஈசன் மனமிரங்கினார். மன்மதனுக்கு உருவமில்லாமல் உயிர்கொடுத்தார். ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் அனங்கரூபனாகத் தோன்றுமாறு உயிர்ப்பித்தார்.

சகல உயிர்களிடத்திலும் அவர்கள் கலந்தார்கள். பிரபஞ்சம் சிறகடித்துப் பெருகின. நன்றியின் மிகுதியாலும், பக்தியாலும் பூலோகத்தில் பரந்து விரிந்திருந்த வில்வ மரக்காட்டிற்குள் ஈசனை பூஜித்தனர். தேஜோமயமான ஓர் ஒளி உருவை பெற்றனர். ஈசனின் மீதுள்ள பக்தியால் உள்ளம் குளிர்ந்தனர். என்றென்றும் இத்தலத்தில் தாங்கள் திருக்காமேஸ்வரர் எனும் பெயரோடும், சிவகாமசுந்தரி என்று அம்பாளும் அருட்பெருக்கி அமர வேண்டுமென வேண்டினர். ஈசனும், உமையும் அன்புக்கு இரங்கி வெள்ளூர் எனும் இத்தலத்தில் இன்றும் அருள்பாலிக்கின்றனர்.

வில்வாரண்யமாக இருந்த இத்தலத்திற்கு வெள்ளூர் என்ற பெயர் எப்படி வந்தது? வலன் எனும் அசுரன் கடுந்தவம் புரிந்து வரங்கள் பல பெற்றான். அவற்றில் மனிதர்களால் வேண்டுமானால் தனக்கு மரணம் வரட்டும் என்று அலட்சிய ஆணவத்தோடு பெற்ற வரம் ஒன்று. மனிதனாவது, தன்னை எதிர்ப்பதாவது! இந்திரன் உடனே பிரம்மா, திருமால் ஆகியோரை அணுகி யோசனை கேட்டான். ‘‘அசுரன் வலன் மனிதனால் மட்டுமே மரணமடைவான். எனவே முசுகுந்தன் என்னும் மன்னனை போரில் முன்னிறுத்து. உனக்கு வெற்றி கிட்டும்’’ என்றனர்.

பூலோகம் வந்த இந்திரன் முசுகுந்தபுரம் எனும் தற்போதைய முசிறியை ஆட்சி செய்து வந்த சோழநாட்டு மன்னன் முசுகுந்தனிடம் உதவி கேட்டான். அசுரன் வலனுடன் போரிடச் செல்லும் முன்பு, முசுகுந்த மன்னன் தன்னுடைய மகுடத்தையும் போர்க் கருவிகளையும் இக்கோயிலிலுள்ள திருக்காமேஸ்வரரின் முன்பு வைத்து வழிபட்டான். முசுகுந்த சக்கரவர்த்திக்கு திருக்காமேஸ்வரர் சிவாஸ்திரம், அகோராஸ்திரம், பாசுபதாஸ்திரம், பத்தியாங்காஸ்திரம், யோமாஸ்திரம், சூரியாஸ்திரம், சிவசாவித்ரியாஸ்திரம், சிவகாயத்ரி யாஸ்திரம் என எட்டு வகையான ஆயுதங்களை வழங்கினார்.

வலன் பெற்ற வரத்திற்கேற்ப குரங்குமுக சாயலை ஒத்த முசுகுந்தன் அவனை போரில் வென்றான். எனவேதான் இவ்வூர் வெல்லூர் என்று பெயர் பெற்று தற்போது வெள்ளூர் என அழைக்கப்படுகிறது. பல மருத்துவ முறைகளை மன்மதனுக்கு ஈசனே கூறியதால் திருக்காமேச பெருமானுக்கு வைத்தியநாதர் என்றும், மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை வழங்கியதால் ஐஸ்வர்யேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸாநுக்ரஹர் என்றும் பல திருநாமங்களில் அழைக்கப்படுகிறார்.

இங்கு மகாலட்சுமி வில்வ மரமாகவே தோன்றி, அடிக்கடி சிலிர்த்து வில்வ இலைகளால் ஈசனை அர்ச்சித்ததாக ஒரு வரலாறு உண்டு. லட்சுமியின் பக்தியை மெச்சி ஐஸ்வர்ய மகுடத்தை அளித்தார், திருக்காமேஸ்வரர். ராவணன் இவ்வாலயத்தில் வழிபாடு செய்து உடல் வலிமை பெற்றான். சுக்கிரன், குபேரன் ஆகியோர் இப் பெருமானை வழி பட்டதன் பலனாக தனாதிபதியாக விளங்கினர். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலின் கோபுர வாயிலில் அரசும், வேம்பும் பின் நிற்க, சந்தான பிள்ளையார் அருள்கிறார். உள்ளே கொடிமரம், பலிபீடம், நந்தியம் பெருமான், மகா கணபதி ஆகியோரின் அருளை பெறலாம்.

கிழக்கு நோக்கி திருக்காமேச பெருமான் சந்நதியும், தெற்கு நோக்கி சிவகாமசுந்தரி சந்நதியும் அமைந்துள்ளன. தன்னை வணங்குபவர்களை வசீகரித்து தன் அளவற்ற அருளை வழங்கும் கருணாமூர்த்தியாக திருக்காமேஸ்வர பெருமானும், சிவகாம சுந்தரியும் வீற்றிருக்கிறார்கள். இங்கு ராவணனும், முசுகுந்த சக்கரவர்த்தியும் சேர்ந்து திருக்காமேஸ்வரரை வழிபடும் சிற்பமும், கோயிலின் வடகிழக்கு பகுதியில் சுரங்கமும் அதனுள் தியான லிங்கமும் உள்ளன.

ஆலய பிராகாரங்களில் மகாவிஷ்ணு, மோட்ச கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, பிரம்மா, விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், கால பைரவர், ஞான பைரவர் சந்நதிகள் அமைந்துள்ளன. வாயோர் தட்சணாபாகம் என அழைக்கப்படும் வடமேற்கு பகுதியில் வில்வ மரமும், அதன் கீழ் ஐஸ்வர்ய மகுடத்துடன் குபேர பாகத்தில் மகாலட்சுமி அமர்ந்திருக்கும் கோலம் காணுதற்கு அரியது. மகாலட்சுமியின் ஐஸ்வர்ய மகுடத்தில் லிங்க திருமேனி இருப்பது கூடுதல் சிறப்பு. லட்சுமி கடாட்சம் என்பார்களே அதன் மொத்த வடிவழகும் இங்குதான் உறைந்திருக்கிறது.

திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து மேற்கே 32 கி.மீ. தொலைவிலும், முசிறியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் வெள்ளூர் கிராமம் உள்ளது. முசிறியிலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து வசதி உள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum