Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


நீண்ட கரங்கள் அருளிய நீடித்த நன்மைகள்

Go down

நீண்ட கரங்கள் அருளிய நீடித்த நன்மைகள் Empty நீண்ட கரங்கள் அருளிய நீடித்த நன்மைகள்

Post by oviya Sun Dec 07, 2014 8:32 am

முன்னொரு சமயம் தீர்யவாகு என்ற ஒரு முனிவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தார். மிகுந்த சிவபக்தி கொண்டவர். அவர், எந்த இடத்தில் இருந்தாலும் கங்கை நதி ஓடும் திக்கு நோக்கித் தன் கரத்தை நீட்டினாரென்றால், அந்த கை நீண்டு சென்று கங்கை நதியையே தொடும்! அப்படிப்பட்ட ஆற்றலை பெற்ற சிவனடியார் அவர். பற்பல கோயில்களுக்குச் சென்று சிவனை வழிபட்டு பெரும் தபோ வலிமை பெற்றவர். கயிலாயம் சென்று சிவனை நேரில் தரிசனம் செய்தவர். கயிலாய மலையில் இருந்தவாறே கங்கையை நோக்கி கைகளை நீட்டி, கங்கையின் புனித நீரை எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து மகிழ்ந்தவர்.

இவர் ஒருமுறை ‘கடுக்கை’ மரங்கள் அடர்ந்த ஒரு வனத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருந்த சிவன், வீராட்டேஸ்வரர் பெருமான். இவர் உக்கிரமூர்த்தி, இந்த சிவபெருமானை கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட விருப்பம் கொண்டார் தீர்யவாகு. விநாயகரை தொழுத பின்னர்தான் எந்த பூஜையையும் ஆரம்பிக்க வேண்டும் என்பது நியதி. சிவன் மேல் கொண்ட பிரியத்தினாலும் சிவபூஜையை உரிய முகூர்த்த காலத்தில் முடிக்க வேணும் என்ற அவசரத்தினாலும் தீர்யவாகு முனிவர் கணபதி பூஜையைத் தவிர்த்துவிட்டு, சிவபூஜையை செய்யத் துவங்கினார்.

பற்பல நறுமணம் கொண்ட திரவியங்களினால் சிவனை அபிஷேகித்துப் பூஜை செய்து வழிபட்ட பின்னர், புனித கங்கா தீர்த்த அபிஷேகம் செய்ய கைகளை கங்கை நதியை நோக்கி நீட்டினார். வழக்கமாக, கங்கை நதியினை நோக்கி வளர்ந்து, கங்கை நீரை அள்ளும் கைகள், அன்று விநாயகருடைய அருள் இல்லாததினால், கைகள் நீளாமல் குறுகின. முனிவர் பதைபதைத்தார். பின் தனக்கு ஏற்பட்ட இந்நிலை, விநாயக பூஜையைத் தவிர்த்ததால் வந்தது என்பதனை ஞானத்தால் உணர்ந்துவருந்தினார்.

உடனே விநாயகரை தொழுது, தனது தவறை மன்னிக்க வேண்டும் என மனமுருகி வேண்டினார். விநாயகரும் அவர் முன் எழுந்தருளி, ‘‘இம்முறை உமது கரங்கள் குறுகி நின்றமையால், இந்தத் தலத்திற்கு ‘குறுக்கை’ என்றே பெயர் நிலைக்கும். உமது வருத்தம் போக்கினோம். இன்று முதல் இந்த தலத்தில், எமக்கும் ‘குறுக்கை விநாயகர்’ என்ற பெயர் உண்டாகும் வண்ணம் யாமும் எமது கரங்களை குறுக்கியே நிற்போம்’’ என அருள்பாலித்தமையால், அன்றிலிருந்து இந்த கணபதியை குறுக்கை விநாயகர் என்றே கொண்டாடுவர் தேவர்கள். இவருக்கு, பெயருக்கு ஏற்றாற்போல கரங்கள் குறுகிக் காணப்படும். பிறகு, முனிவர், விநாயகர் அருளால், கரங்கள் நீளப் பெற்று கங்கை நீரை எடுத்து சிவபெருமானை அபிஷேகித்து மகிழ்ந்தார்.

‘‘இந்த சிவபெருமான் சுயம்பு மூர்த்தி. இவருக்கு வீராட்டேஸ்வர பெருமான் என்று பெயர். ரதிதேவியின் கணவன் மன்மதனை சிவ
பெருமான் சுட்டெரித்த தலம் இது. காமதேவன் என்று தேவர்களாலும் போற்றப்படும் மன்மதன், சிவபெருமான் மீது காமம் என்ற மலர்க்
கணையை தொடுத்தமையால், சிவன் சற்றே நெற்றிக் கண்ணை திறக்கத் தோன்றிய ஜ்வாலை, மன்மதனைச் சாம்பாலாக்கியது. பின் ரதி
தேவியின் பிரார்த்தனைக்கு சிவன் மனமிரங்கி, மன்மதனுக்கு அவனுடைய முந்தைய உருவத்தையே தந்து ‘சிரஞ்சீவி’ என்ற வரமும் தந்தார். ரதிதேவியும் மன்மதனும் சிவபெருமானின் அழகிய நடன கோலத்தை கண்ட புண்ணிய தலம் இதுவே. மேற்கு திசை நோக்கும் சிவபெருமானை வழிபடுவோருக்கு சனி தசையால், சனிக்கிரகத்தால் வந்த பீடை ஒழியும்; மன்மதன் முக்தி பெற்ற பூமி இது என்பதினால், தடைகள் விலகி, திருமணம் இனிதாகக் கைகூடும்; இந்த சிவமூர்த்தியை கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் வந்து சேரும்’’ என்றார் அகஸ்தியர்.

‘‘தடையான மணத் தடை
தவிடுபொடியாகிப் போகும்பாரு,
காமனைப் பயந்தானை கண்டு
கங்கை நீராடி நிற்போருக்காகததேது’’
- என்பது அவர் வாக்கு.
இங்கு உள்ள தீர்த்தம் சூல தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிரம்பிய தீர்த்தம் இது என்கின்றனர் சித்தர்கள். பேதலித்த புத்தி, சரும நோய், கபால பீடை, கண் நோய் போன்றவை, இங்குள்ள சூல தீர்த்தத்தில் நீராட விலகும்.
‘‘பிணி பல போக்கும்
வித்தை கண்டோம், பீடை
யென மேனியில் விரும்பா
பீடையாம் பித்தமுஞ் சரும ரோக
முமழிய சூல தீர்த்தமாடுவீரே.
முழுமதி தன்னிலே முழுகக் கபால
பீடையுங் கழண்டோடுமே’’
தல விருட்சம், கடுக்காய் மரம். இதனடியில் உள்ள நந்தி, உயிரோட்டம் உள்ளவர். சிவராத்திரியில் இத்தலத்திற்கு அனைத்து சித்தர்களும் வந்து தொழுது செல்வர். அஞ்சனம் வித்தை கற்க எண்ணுவோர், இக்கடுக்காய் தல விருட்சத்தை ஆராதித்து பன்னிரு அமாவாசை பூஜித்தால், சித்தி பெறலாம் என்கிறது வியாச நாடி:
‘‘ஞானம்பிகை பர்த்தா குடிகொண்ட
விருட்சத்தை ஈராறு திங்கள்
மதியிலா காலத்து மன்றாடித் தொழு
வோருக்கு மந்திரஞ் சித்தியுண்
டாம். அஞ்சன மார்க்க சூத்திர
முமறிவாரே’’

யோக நிலையில் இங்கு சிவபெருமான் வீற்றிருக்கும் தன்மையால் யோகீஸ்வரர் என்றும் சகல சித்திகளும் தருபவள் என்பதால், அம்பிகை பூரணி அம்மன் என்றும் பெயர் கொண்டிருக்கிறார்கள். அட்ட வீரட்டான சிவத்தலங்களுள் தேவர்கள் கொண்டாடும் புண்ணியத் தலமிது. காமதேவனை எரித்த இந்த பூமியை பிரம்ம தேவன், ‘காமதகனபுரம்’ என்று போற்றி தொழுதமை யாவரும் அறிந்ததே. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் மனமுருகி வழிபட்ட திவ்ய மூர்த்தி இவர்.

‘‘திருப்புகழூரில் உமக்கு முக்தி’’ என்று சிவபெருமான் நாவுக்கரசரிடம் கூறியது இங்கு உள்ள காமநாசினி திருச்சபையில்தான். பிறவிப் பயன் அடைய, பாவங்கள் அகல, காம தேவன் அருள் பெற, காதலில் வெற்றியடைய, கணவன்-மனைவி கடைசிவரை இல்லறத்தில் எந்த குறையும் காணாதிருக்க, பிணி இல்லா பெரு வாழ்வு பெற, வற்றாத செல்வம் பெற தொழுவீர், திருக்குறுக்கை
சிவபெருமானையே!

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum